Friday, November 25, 2005

அஞ்சலி! [சிறுகதை]

புதுக்குடியிருப்பு மாவீரர் மயானத்தை அடைந்ததும். விறு விறுவென என் கால்கள் காந்தி அக்காவின் கல்லறையை நோக்கி
நடைபோட்டது. பையினில் இருந்த மலர்கள் அவளிற்கு அஞ்சலி செலுத்த மலர்ந்து கொண்டன. இங்கு வருகிறோம் என்று தெரிநதவுடன்.
அவசர அவசரமாய் பறித்த மலர்கள். இதைப்போல ஒரு நாள் தான் நான் விரும்பாத அந்த நிகழ்ச்சி நடந்தேறியது.

அன்று மழை பெய்து கொண்டிருந்தது. மாவீரர் துயிலும் இல்லம் நோக்கி எங்கள் 'வான்' நகர்ந்து கொண்டிருக்கிறது.
'பாண்ட்' வாத்திக்குழுவில் நானும் இணைந்ததில் இருந்து ஒவ்வொரு முறை இங்கு வரும்போது என் வயிற்றிற்குள் புதுப்புது நோய்களை உணர்வேன்.
மாவீரர் வித்துடல்களிற்கு அஞ்சலி செலுத்தும் போது என் நெஞ்சம் எதையோ நினைத்து ஏங்கும். இது காந்தியக்காவாய் இருக்கக்கூடாது
, எனக்கு தெரிந்த முகங்கள் இங்கு நிற்கக்கூடாது என்று பலவற்றை மனசு வேண்டி நிக்கும்.

நான் சின்னனாய் இருக்கையில் எங்களை விட்டிட்டு அப்பா இறந்த போது கதிகலங்கிப்போனோம். சிறிது காலத்தின் பின்
அம்மாவும் எங்களை விட்டுப் போன பின். நான் செஞ்சோலையில் தஞ்சமானேன்.
காந்தியக்கா அதற்கு முதலே இயக்கத்தில் சேர்ந்துவிட்டாள். அண்ணாவும் சின்னக்காவும் அடிக்கடி என்னை வந்து பார்த்துச் செல்வார்கள்.
காந்தியக்கா எப்ப எங்கு நிக்கிறாள் என்று எனக்கு தெரிவதில்லை. நான் 'பாண்ட்' வாத்தியக்குழுவில் சேர்ந்ததற்கு முக்கிய காரணம்.
இப்படி எங்கையாவது போகும் போது அக்காவை சந்திக்க முடியும் என்பதால் தான். அப்படித்தான் அடிக்கடி எங்காவது சந்திப்போம்.
அக்கா அங்கு நின்றால் 'பாண்ட்' வாத்தியக்குழுக்களை தேடி வருவாள். சந்திப்போம் எப்போதாவது கடிதம் போடுவாள் என்னையும் பார்க்கவருவாள்.

யார் யார் வீரமரணமானார்கள் என்ற செய்தி என் காதை அடையும் வரை என் தொண்டை வறண்டிருக்கும்.
என் அக்காவாய் இருக்கக்கூடாது என்று மனம் தவிக்கும். எல்லாரும் என் அக்காமார் அண்ணாமார் என்றதை அந்த நொடிகள்
என் மனம் மறந்து போய் நிக்கும். அஞ்சலி செலுத்த வந்திருக்கும் மாவீரர் பெற்றோரை என் கண்கள் அவசர அவசரமாய் தேடும்.
அங்கு சின்னக்காவும் அண்ணாவும் இல்லை என்றவுடன் தான் என் மனம் அமைதியாகும்.
அந்தப் பெற்றோர்கள் கண்ணீர் கண்டு மறுபடி என் மனம் கலங்கும்.
அப்போதெல்லாம் அடிக்கடி சண்டை நடக்கும்... அடிக்கடி புதுக்குடியிருப்பு மாவீரர் துயிலும் இல்லம் மட்டுமன்றி அனேக இல்லங்கள் மலர்களால் நிறைந்திருக்கும்.

இப்படி அஞ்சலி நிகழ்வுகளிற்கு கெஞ்சி மண்றாடி அந்தக் குழுவில் நானும் வந்துவிடுவேன். அன்றும் அப்படித்தான் வந்தேன்.
என் வேண்டுதல்கள் பொய்யாய்ப்போனது. 'வான்' புதுக்குடியிருப்பு மாவீரர் துயிலும் இல்லைத்தை அடைந்ததும். நான் வண்டியை விட்டு இறங்கி விடவில்லை அதற்கு முன்
"கலைமகள் கலைமகள்" எனது பெயர் கீழிருந்து சோதியக்காவால் அழைக்கப்படுவது கேட்டு அவசரமாய் இறங்கினேன். "என்னக்கா ஏன் கூப்பிட்டனீங்கள்"? ஒன்றும் இல்லை " 'கொஸ்டல்' போனேன் நீங்கள் இங்க வந்திட்டதாய் சொல்லிச்சினம்
அது தான் என்று இழுத்தார்". பதட்டத்துடன் "என்னக்கா விசயம்" என்றேன். அதற்குள் ஆயிரம் எண்ணங்கள் என்னுள் உதயமாகி மறைந்து விட்டன.
"உங்கட அக்கா வீரச்சாவு" .................... "வீட்டிற்கும் தகவல் போயிட்டுது" வீட்டில இருந்து ஆக்கள் வந்திருக்க வேணும்.
இதை உங்களுக்கு தெரிவிக்க தான் வந்தனான்". எனக்கு ஆறுதல் சொல்லிவிட்டு சென்றார்.

ஒரு நிமிடம் யாவரும் அமைதியானார்கள் என் கண்கள் ஆறாய் பெருக்கெடுத்தது. உள்ளே சென்றேன், ஓடிச்சென்று அக்காவின் முகத்தை பார்த்துவிட என் மனம் ஏங்கியது.
அருகில் சென்றேன் இன்று இங்கு வந்திருக்கவே வேண்டாம் என்று என் மனம் அழுதது.
சின்னக்கா விம்மி விம்மி அழுதுகொண்டிருந்தாள் அண்ணாவின் கண்களும் தான் கலங்கிக்கொண்டிருந்தன. எப்பவும் காந்தியக்காவோடு
கூடியிருக்கும் புன்னகை இன்றும் அவளை விட்டு விலகிவிடவில்லை. முகம் கறுத்துப்போய் இருந்தது. என்னைக் கண்ட சின்னக்கா கட்டிப்பிடிச்சு அழுதாள்.
அண்ணா என்ன செய்வார். அவரும் தான். இடையில் ஒரு குரல் " கலைமகள் பிரச்சனை இல்லை நீங்கள் அஞ்சலியைச் செலுத்துங்கோ நாங்கள் ஆளொரால் கூப்பிடிறம் என்றார் சோதியாக்கா". நூற்றுக்கணக்கான அக்காமார் அண்ணாமாருக்கு 'பாண்ட்' வாசிச்ச நான் என் அக்காவை மட்டும் எப்படி தவிர்த்து விடமுடியும்.

"இல்லை அக்கா பிரச்சனையில்லை நான் வாசிக்கிறன். அதை விட சிறந்த அஞ்சலி வேறெது" சொல்லி விட்டு நிமிர்ந்தேன். வார்த்தைகள் இன்றி
முதுகை தட்டி விட்டு விலகினார் சோதியக்கா. அதன் பிறகு இங்கு வரும் வேளை பதட்டங்கள் தேடல்கள் இருப்பதில்லை. கண்மட்டும்
கல்லறையோடு ஏதோ பேசும். காந்தியக்கா என் கண்ணீரோடு உணர்வால் பேசுவாள் இங்கு தானே விதைக்கப்பட்டிருக்கிறாள். என் அக்காவாய்
இருக்கக்கூடாது என்ற நிலை மாறி எல்லா அக்காக்களுக்குமாய் மனம் அழும் அஞ்சலி செலுத்துவேன்.

Monday, November 21, 2005

ஊமைக் குரல் - ( தேசப்பிரியன்)


பாடசாலை விட்டு வந்த சுஜீவன் அறையின் மேசையில் கிடக்கும் கடிதத்தைப் பார்க்கிறான். இது அண்ணன் கையெழுத்தாச்சே என்று எதிர்பார்ப்பை வளர்த்தபடி அவசர அவசரமாக கடிதத்தை பிரித்துப் படிக்கிறான். படித்தவன் கண்களில் நீர் வடிய மூலையில் சாய்கிறான். சுஜீவன் 12 வயசுச் சிறுவன். போரின் விளைவால் அனாதையாகிவிட்டவன். உறவினரோடு தங்கித்தான் வாழ்கிறான். எதிர்காலம் என்பது அவனைப் பொறுத்தவரை நிச்சயமில்லாததாகி விட்டது.

சசி சுஜீவனின் அண்ணன். அவர்கள் இருவருமே குடும்பத்தில் மிஞ்சி உள்ளனர். தாயும் தகப்பனும் சில ஆண்டுகள் முன்னர், யாழ் குடாவில் கிளாலிக் கடற்பரப்பில் பயணிக்கும் போது, சிங்களக் கடற்படை பயணிகள் படகுமீது நடத்திய தாக்குதலில் படகோடு காணாமல் போனவர்கள் தான். இன்று வரை அவர்களின் கதி என்னவென்று யாருக்கும் தெரியாது. சசி கெட்டிக்காரன். இழப்புக்களைக் கண்டு துவண்டுவிடாது உயர்தரம் படித்து கண்டி பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிப் போனான்.

சசியைப் பொறுத்தவரை அவன் பிறந்தது வளர்ந்தது எல்லாம் அவனின் சொந்த ஊரான ஒரு விவாசயக் கிராமத்தில் தான். தாயும் தகப்பனும் ஆசிரியர்கள் என்றாலும் விவசாயத்தோடும் ஒன்றிப்போனதாலோ என்னவோ அவர்களுக்கு சொந்த ஊரைவிட்டு வேறிடம் நகரப் பிடிக்கவில்லை. அப்போ அவர்களின் திட்டமெல்லாம் பிள்ளைகள் கஸ்டங்கள், நஸ்டங்கள், உறவுகள் என்று எல்லாம் அறிந்து வளர வேண்டும் என்பதாகத்தான் இருந்தது. அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யத்தக்கதாகவே சசியும் உருவாகி இருந்தான்.பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகி கண்டிக்குப் போன போது தான் அவன் முதன்முதலாக புதிய சூழலுக்கும், புதிய மனிதர்களுக்கும், வேற்று மொழிக்கும் என்று புதியவற்றிற்கு முகங்கொடுக்க வேண்டி இருந்தது.

அன்று பல்கலைக்கழகத்தில் முதல் நாள். வழக்கம் போல சாதாரண உடையோடு எளிமையாக சசி தனது வகுப்பறை நோக்கிச் சென்று கொண்டிருந்தான். போகும் வழியெங்கும் இளைஞர்களும் யுவதிகளும் கூடிக்கூடி ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். அவன் அவற்றை அவதானித்தப்படி அவர்களைப் பொருட்படுத்தாது தனது முதல் வகுப்பு நோக்கி பல கனவுகளோடு நடந்து கொண்டிருந்தான். அப்போ யாரோ கைதட்டும் ஓசை கேட்டு திரும்பிப் பார்த்தான். ஒரு குழு அவனை தங்களிடம் வர அழைத்தது. சைகை மூலம் தனக்கு வகுப்பு என்று சொல்லி விட்டு சசி வகுப்பை நோக்கிச் சென்றான். வகுப்பு முடிந்து வெளி வரும் போது அதே குழாம் அவனை நெருங்கி வந்து " அடேய் கூப்பிட்டோம் எல்லோ ஏன் வராமல் போனாய் " என்று மிரட்டலாக தமிழில் கேட்டனர். சசியும் பதிலுக்கு "எனக்கு வகுப்புக்கு நேரமாச்சு அதுதான் சைகை காட்டிட்டுப் போனன்" என்றான் துணிச்சலை வரவழைத்தப்படி. அதற்கு அவர்கள் "என்ன எதிர்த்தா கதைக்கிறாய்... நாங்கள் உனக்கு 'சீனியேர்ஸ்...' எங்கள் உதவி இல்லாமல் நீ இங்கிருந்து வெளியேற முடியாது" என்று மேலும் மிரட்டினர். அதைக் கேட்ட சசி கொஞ்சம் திக்குமுக்காடித்தான் போனான். "இப்ப என்ன கேட்கிறீங்கள்" என்று அப்பாவித்தனமாகக் கேட்டான். "உன்னை ஒன்றும் கேட்கவில்லை. பின்னேரம் விடுதிக்கு வா" என்றனர் அவர்கள். "வராமல் விட்டா நடக்கிறதே வேற" என்று போகும் போதும் மிரட்டி விட்டுச் சென்றனர்.

பின்னேரம் போல சசி தயங்கித் தயங்கி அவர்கள் சொன்ன விடுதிக்குச் சென்றான். அங்கு அவனைக் கண்ட அந்தக் கூட்டத்தினர் "வாடா என்ன சுணக்கம்" என்றனர். "சுணக்கம் இல்லை அண்ணா.. சொன்ன நேரத்துக்கு வந்திட்டன்.. ஏன் கூப்பிட்டிங்கள்" என்று அப்பாவித்தனமாய் பதிலுக்கு வினவினான் சசி. "இதோடா ஏன் கூப்பிட்டமாம்...இங்க உனக்கு விருந்து வைக்கப் போறம் அதுதான் கூப்பிட்டம்" என்றனர் அவர்கள் நக்கலாக. அதைக் கேட்ட அவர்களின் பெண் நண்பிகள் வாய்விட்டு பெரிசாக சிரித்தனர். அவர்கள் தங்கள் ஆண் நண்பர்களை உற்சாகப்படுத்தும் விதமாக கூச்சலும் போட்டனர். இதையெல்லாம் அவதானித்த சசி இவர்கள் பகிடிவதைக்கு தன்னை பலியாக்கப் போகின்றனர் என்பதை தெளிவாகப் புரிந்து கொண்டு நடக்கிறது நடக்கட்டும் என்று துணிச்சலை வரவழைத்தப்படி, அவர்களை எதிர்கொண்டான். அவனுடைய அப்பாவித்தனத்தைக் கண்டுவிட்ட அந்த மாணவர்களும் மாணவிகளும் அவனை இலகுவில் விடுவதாகவும் இல்லை. ஆரம்பத்தில் பெயர் ஊர் என்று கேள்விகள் கேட்டு ஆரம்பிக்கப்பட்ட அவர்களின் அறிமுகப் பகிடிவதை ஆபாசம் கலந்து அக்கிரமாகத் தொடர்ந்தது. அது எல்லை மீறப் போகிறது என்பதை ஊகித்து அறிந்து கொண்ட சசி " இதுக்கு மேல என்னால் எதுவும் செய்ய ஏலாது.. செய்யுறதைச் செய்யுங்கோ" என்றான் துணிவோடு. "அடேய் நீயும் எங்கட ஊர் தான் நாங்களும் அதே ஊர் தான்... தனியாள் உனக்கே இந்தளவு திமிர் எண்டா எங்களுக்கு எவ்வளவு இருக்கும்" என்று அவர்கள் பதிலுக்கு அவனை மிரட்டியதுடன் நெருங்கி வந்து சட்டையை பிடித்து இழுது தள்ளிவிட்டனர்.

தரையில் விசையோடு விழுந்த சசி மூர்ச்சையுற்றான். அதைக் கண்டு அவர்கள் ஓட்டம் பிடித்தனர். சில மணி நேரத்தின் பின் கண் விழித்த சசி தான் வைத்தியசாலையில் இருப்பதை உணர்ந்தான். ஆனால் அவனால் பழைய நினைவுளை மீட்டிப் பார்க்க முடியவில்லை. தான் ஒரு புதிய உலகில் இருப்பது போல உணரத் தொடங்கினான். தன்னிலை அறியாது தவித்தான். வைத்தியர்கள் வந்து அடிக்கடி பரிசோதித்துவிட்டுச் சென்றனர். இறுதியில் அவன் மனநோய் மருத்துவமனைக்கு மாற்றப்பட பரிந்துரைக்கப்பட்டு அங்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டான். அங்கு இரண்டு ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையிலும் அவன் இன்னும் பழைய நிலைக்கு திரும்பவில்லை. இருந்தாலும் தன் தம்பியை மட்டும் அப்பப்போ சிறிதளவு அவனால் நினைக்க முடிந்தது. அவனுக்காக இயலும் போதெல்லாம் ஓரிரு வரிகள் எழுதுவான். அப்படி இரண்டு வருடங்கள் எழுதிய அந்த வரிகளை தம்பிக்கு அனுப்ப முடிவு செய்தான். தாதிகளின் உதவியுடன் அதை தம்பிக்கு அனுப்பியும் வைத்தான்.

இரண்டு ஆண்டுகளாய் தன்னை விட்டுப் பிரிந்துவிட்ட, தன் ஒரே ஆறுதல், சொந்த அண்ணனின் எழுத்துக்களை, வரிகளை கண்டவிட்ட அந்தப் பிஞ்சு சுஜீவன் அண்ணனை நேரில் காண்பதற்காய் ஏங்கினான். வந்த கடிதம் தாங்கி வந்த பாச வரிகளை மீண்டும் மீண்டும் படித்துப் படித்து கண்ணீரால் அதை பூஜித்தான். அவன் படும் துன்பங்களை, தாங்கும் ஏக்கங்களை அண்ணனிடம் பகிர வழியின்றி மெளனியாக அழுவதை விட அவனுக்கு வேறேதும் செய்யத் தெரியவில்லை. அவன் சின்னவன். அவனின் ஆசைகள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க யார் இருக்கினம். அம்மாவா அப்பாவா யாருமே இல்லை. ஏக்கங்கள் மட்டுமே அவனோடு மிஞ்சி இருக்கிறது. ஏங்கியபடியே இயலாமையோடு வெற்றறையின் மூலைக்குள் கடிதத்தை அணைத்தபடி முடங்கிக் கொண்டான் சுஜீவன்.

அவனைப் பொறுத்தவரை அவனுக்குள் இவ்வளவு துன்பங்களையும் ஏக்கங்களையும் பரிசளித்தவர்கள் பெற்ற தண்டனை என்று ஏதுமில்லை. அதற்காய் அவனுக்கு கிடைத்த பரிகாரங்களோ...சமூகத்தில் அனாதை.. பரிதாபத்துக்குரியவன் என்பவைதான். குற்றம் செய்யாமலே மூலைக்குள் முடங்கிவிட்டது சுஜீவன் மட்டுமல்ல. அவனைப் போன்று எத்தனையோ பிஞ்சுகள். அவர்களின் நியாயங்கள், எதிர்பார்ப்புக்கள், தீர்வுகள் இன்றி ஏக்கங்களோடு வெளிப்படாமலே ஊமைக் குரல்களாய் அடங்கிப் போயிருக்கின்றன. உலகில் யார் இருக்கார் அவர்களுக்காய் நீதி கேட்க ?! ஊமைக் குரல்களாய் அடங்குதல் தான் அவர்கள் விதியோ அல்லது சதியோ ?! நாளை இந்தச் சுஜீவன் தன் விதியை சதியை வெல்லானா ?! எதிர்பார்ப்புகளோடு என் விழிகள் திறக்கின்றன...அப்போ மூலைக்குள் அடங்கியவன் நிச்சயமான தெம்போடு மற்றவர்களின் ஆதரவுக்கு இடங்கொடாது தானே எழுவதைக் கண்டேன்..அண்ணனுக்காய்..தனக்காய்..தன் போன்றோருக்காய்..என்பதாய் உணர்ந்தேன்.

Monday, November 07, 2005

வீழா வீரங்கள்...!

அதிகாலை ஒரு மணி இருக்கும். வெடிச்சத்தம் காதைப் பிளக்க.. நித்திரை இடையில் கலைகிறது. "சண்டை தொடங்கிட்டுது எல்லாரும் எழும்புங்கோ" அம்மா அவசரப்படுத்திக் கொண்டிருக்க, பலாலிப்பக்கம் இருந்து 'ஆட்லறிகளும்' கூவுகின்றன. "மண்டை தீவுப்பக்கம் தான் அடி விழுகுது" அப்பா தன் பங்குக்கு சொல்லும் பொழுதே வெடிச்சத்தம் உக்கிரமடைகிறது. பயம் கெளவிக் கொள்ள வீட்டை விட்டு வெளிய வந்து மாமரத்துக்கு அருகில் நின்றபடி அவதானிக்கிறோம். "சந்திரிக்கா போட்ட யுத்த நிறுத்தம் இந்தளவும் தானா?" அம்மா ஏக்கத்தோடு என்னைப் பார்த்துக் கேக்க, "அவள் கதிரை பிடிச்சிட்டாள் எல்லோ எனி என்னவும் செய்வாள்" அப்பா பதிலுரைக்கிறார். நித்திரை குழம்பிய பக்கத்து வீட்டு 'அங்கிளும்'. வெளியே வந்து, வீதியில் நின்றபடி " என்ன அடி தொடங்கிட்டுது போல". பதிலுக்கு அப்பா "ஓமோம் ஓமோம் சத்ததைப் பார்க்க அப்படித்தான் தெரியுது, பலாலி கோவமா இருக்குது இழப்புகள் போல" .... " இருக்கும் விடிய பேப்பரில பார்க்கத்தான் தெரியும்". என்ன சாதாரணமாய் இருக்கினம். என் மனம் கேள்வி கேட்டுவிட்டு, நினைவுகளால் விரிகின்றது.

அவனை சந்தித்து நண்பனாக்கியது அதிஸ்டமோ துரதிஸ்டமோ நான் அறியேன். வீட்டுக்கு அருகில்தான் அவனும் வாழ்ந்தான். இருந்தாலும் நாங்கள் பேசிக் கொண்டதேயில்லை. கனகாலம் முகம் அறிந்திருந்தும் பேச்சுக்கு அவசியம் இருக்கவில்லை. அன்று ஒருநாள் திலீபன் அண்ணாவின் நினைவு நாளுக்காய் வாழைமரம் கேட்டு வீட்டுக்கு வந்தான். "வாழைமரம் வேணும் தருவிங்களா" "ஏன் தம்பி எதுக்கு " சம்பிரதாயமாய் பதில் கேள்வி எழுகிறது அம்மாவிடம் இருந்து. "திலீபன் அண்ணாவின் நினைவு நாளுக்கு 'ஆன்ரி' ". "அதுதான் பொடியங்கள் வாழைமரம் கட்ட வேணாம் என்றிட்டினம் எல்லோ பிறகேன் கட்டுறீங்கள்..". "ஓம் 'ஆன்ரி' இது நான் எங்கள் வீட்டில படம் வைக்க" பதிலுக்கு அவன். "சரி தம்பி வெட்டிப் போங்கோ" "அந்த வாழைகளைக் காட்டி விடப்பு" . என்னிடம் அம்மா. கத்தியோடு வாழை காட்ட அவனைத் தொடர்கிறேன். அப்போ.. "உங்களைக் கண்டிருக்கிறன் எங்க இருக்கிறனீங்கள்" தெரிஞ்சும் கேட்கிறேன்.. "செல்வாண்ணா கடைக்கு அருகில" எங்க படிக்கிறீங்கள் "கொக்குவில் இந்துவில"..பதிலுக்கு அவன் "நீங்கள்"... நான் "பற்றிக்ஸ்".

அன்றிருந்து சந்திக்கும் போதெல்லாம் நாங்கள் கதைத்துக் கொள்வோம். ஒரு நாள் அவனே கேட்டான். "நீங்கள் தமிழுக்கு ரியுசன் போறனீங்களோ".. இல்லை நான் தமிழுக்குப் போறதில்லை.. "கந்தசாமி மாஸ்ரட்ட போக விருப்பமா". "அம்மாட்டக் கேட்டிட்டு சொல்கிறேன்" அம்மாவிடம் கேட்க அவாவும் சம்மதிக்க நாங்கள் இருவருமே அவரிடம் படிக்க இணைந்தோம். அவருடைய வகுப்புகள் விடிய 6 மணிக்கு ஆரம்பிக்கும்.அவன் விடிய 5:00 க்கே வீட்டு கேற்றில் தட்டிக்கொண்டு நிற்பான். எனது 'சைக்கிளில்' அக்கறையோடு தோழமையோடு இருவரும் வகுப்புப் போவோம். கட்டுரைகள் வீட்டுவேலைகள் கலந்தாலோசித்து செய்வோம். அப்படியே நாங்களும் நல்ல நண்பர்களானோம்.

திடீர் என்று ஒருநாள் நான் கந்தரட்ட வரேல்ல என்றான்.."ஏன் என்ன பிரச்சனை.." . என்றேன். "பிரச்சனை ஒன்றுமில்ல"...என்று இழுத்தான். சொல்லுங்கோ நாங்கள் இயன்றது செய்யுறம் என்ற.."நான் வேற ரியுசனுக்கும் போறனான்.. எல்லாத்துக்கும் காசு பிரச்சனை அதுதான்" என்றான். பாவம்.. அது உண்மைதான். அவன் வீட்டில் அம்மா தான் எல்லாம்..வருமானம் குறைவுதான். அவன் அப்பா வேறு திருமணம் செய்து போய்விட்டார். நான் சொன்னேன் "சரி நாங்கள் கந்தரோட கதைப்பம்...அவர் கஸ்டம் என்றா இலவசமாப் படிக்க விடுவாராம்". கதைச்சுப் பார்ப்பமே என்றேன். ஓம் என்றான். நாங்களும் கதைக்க அவரும் ஓம் என்ற அவன் வகுப்பைத் தொடர்ந்தான். பிரச்சனைகள் ஏதுமின்றி எங்கள் கல்வியும் நட்பும் தொடர்ந்தது.

வழமை போல் அன்றும் வகுப்பிருந்தது. ஆனால் அவன் வரவில்லை. வரமாட்டான் என்று சொல்லவும் இல்லை. காத்திருந்துவிட்டு நான் வகுப்புக்கு சென்றுவிட்டோன். அடுத்த நாளும் அவன் வரவில்லை. வீட்டில் போய் விசாரிக்க அவன் உறவுக்காரர் வீட்டுக்கு கிளிநொச்சி போனதாகச் சொன்னார்கள். ஏக்கம் ததும்ப எப்ப வருவார் என்று கேட்டேன். "அவர் அங்க இருந்துதான் படிக்கப் போறார்" என்றார்கள்...அது கேட்டது முதல் மனசு கனத்தது. நண்பனென்று அவனுடத்தான் அதிகம் பழகியது, இருந்தும் இடையில் இப்படிச் செய்திட்டானே ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லை... கோவமும் கவலையும் சேர ஏமாற்றத்துடன் நட்புக்கு முற்றுப்புள்ளி வைத்தேன்.

மணலாறில் மின்னல் இராணுவ நடவடிக்கை தொடங்கிய போது ஒரு மாதத்துக்கும் மேலாய் பெரிய சண்டை. காயமடைந்த போராளிகள் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டார்கள். பாடசாலையில் இருந்து போராளிகளைப் பரமாரிக்க நண்பர்கள் போனார்கள். நானும் ஒரு நாள் கூடிப் போனேன். அங்கு ஒரு அதிர்ச்சி காத்திருப்பது அறியாமல் என் வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தேன். அப்போ "இங்க ஆக்கள் அதிகம் நிக்கிறீங்கள் மற்ற வோட்டுக்குப் போங்கோ" என்று ஒரு போராளி அண்ணா சொன்னார். நானும் எங்களில் சிலரும் அங்கு போனதும் கண்டகாட்சி மனதை உலுக்கியது. முதற் கட்டிலில் அவன்.... நண்பனாகி.. சொல்லிக் கொள்ளாமலே..என்னைப் பிரிந்தவன் கால் ஒன்றை இழந்து காயத்தோடு அனுங்கியபடி.... ஓடிச்சென்று பரிவோடு பார்வைகளால் பேசினேன். அவன் கண்கள் கலங்கின. ஏக்கங்கள் ததும்ப என் கைகளைப் பிடித்தான். கவலைப்படாதே எல்லாம் சரியாகிடும் என்று ஆறுதல் கூறிவிட்டு அவனையும் மற்றவர்களையும் பராமரிக்கும் பொறுப்பை கேட்டு வாங்கி சில தினங்கள் செய்தேன்.

சில வாரங்கள் கழித்து காயங்கள் ஆறி அவனும் வீட்டுக்கு வந்து பேசினான். நான் மீண்டும் போகப் போறன். "அம்மா பாவமில்லையா" என்றேன்.." அப்படிப் பாத்திருந்தா நான் போயிருப்பேனா.. என் கடமையை நான் முழுக்க முடிக்க வேணும்" என்றான் அவன். அவனிடம் உறுதி தெரிந்தது.. வேட்கை இருந்தது. பாசறையில் வளர்ந்தவன் எல்லா..திடமாய் இருந்தான். உன் இலட்சியம் வெல்ல வாழ்த்துக்கள் என்று வாழ்த்துவதை விட வேறெதுவும் பேச சந்தர்ப்பம் அளிக்கவில்லை அவன். அவனுடைய உறுதி என்னை வியக்க வைத்தது. அன்று ஒரு நாள் கோபத்தில்.. அவனுடன் வைத்த நட்புக்கான முற்றுப்புள்ளியை அந்தக் கணமே அகற்றிக் கொண்டேன். ஒரு இலட்சிய வீரனை நண்பனாக்கியதில் எனக்குள் இறுமாப்பு பற்றிக் கொண்டது.

அதன் பின் எங்கு சண்டை என்றாலும் அவன் எண்ணங்களே என்னை ஆட்கொள்ளும். இன்றும் சண்டை என்றதும் அவன் எண்ணக்களே எண்ணில் வந்து மோதின. பொழுது விடிய விடிய சண்டையின் உக்கிரம் தனிந்தது. பயம் நீங்கி கொஞ்சம் படுப்பம் என்று தூங்கிய நான் எழும்ப 10 மணிக்கு மேல ஆகிட்டுது. முகத்தைக் கழுவிட்டு சைக்கிளை ஒரு மிதி மிதிச்சு பேப்பரோட வந்து நின்றேன். செய்தி பெரிசா இல்லை. "மண்டைதீவு இராணுவ முகாம் மீது தாக்குதல்" தலைப்புச் செய்தியோடு விபரம் பெரிசா இருக்கவில்லை. விபரங்கள் கிடைக்கல்லப் போல ஸ்பெசல் பேப்பர் வரும் என்று காத்திருந்தன். வீட்டில் எல்லோருக்குள்ளும் செய்தியறிய ஏக்கம் கலந்த ஆவல். அன்றைய பொழுது அசாதாரணமாகவே கழிந்து கொண்டிருந்தது.

பிற்பகல் போல ஸ்பெசல் பேப்பர் வந்தது. விபரங்கள் தேடத்தேட ஏக்கங்கள் அதிகரித்தது, போராளிகளுக்கு என்ன இழப்பு. விபரம் காணேல்ல என்று எண்ணியபடி பக்கங்களைப் புரட்டினேன். ஓர் இடத்தில் வீரச்சாவு பட்டியலில் சிறிதாக இருந்தது. சில பெயர்கள் மட்டுமே இருந்தன. அப்பாடா பெரிய இழப்பு இல்லை. என் நண்பன் அவன் பெயரும் இருக்கவில்லை. ஏதோ சொல்லி மனம் தன்னைத்தானே தேற்றிக் கொண்டிருக்கும் போது சோக கீதம் இசைக்கும் சத்தம் கேட்டது. அப்போதுதான் மனதுக்குள் ஏதோ ஒரு குற்ற உணர்வை உணர்ந்தேன். பல கேள்விகள் முளைக்கலாயின.. அவன் மட்டுமா எனக்கு நண்பன்.. பழகினால் தானா நட்பு.. சொந்த மண்ணுக்காய் வீழ்ந்துவிட்ட இவன் நண்பன் இல்லையா.. ஏன் நான் இப்படி சுயநலத்தோடு ..??! விடை காணத்துடித்தேன்..அன்றிலிருந்து எல்லாப் போராளிகளயும் என் நண்பர்களா எண்ணிக் கொண்டேன். நண்பன் ஒருவன் வித்தாகி விழுந்துவிட்டால் கண்ணீர் சிந்தித்தான் செய்தியே படிப்பேன். வித்தாகிவிட்டவர்களுக்கு தேடிச் சென்று மரியாதை செய்வேன். "எதிர்பார்ப்புகள் இல்லா உன்னதங்கள் மாவீரர்கள்" என்ற வசனத்தை எனக்குள் பொறித்துக் கொண்டேன்..! அவர்களை உதாரணமாக்கி வாழப்பழகிக் கொண்டேன். உண்மையில் என் நண்பனே இந்தனை மாற்றங்களுக்கும் வித்திட்டவன். இப்போ அவனே புரட்சியாளன் எனக்குள். பிறிதொரு சண்டையில் அவன் வீரச்சாவடைத்த போது அவனுக்காக அழவில்லை.. இறுமாந்து கொண்டேன். எனக்குள் புரட்சியாளனாக அவனே வாழ்கிறான். அவன் வீழ்ந்தாலும் அவன் விட்டுச் சென்ற நினைவுகள் வீழாது வாடாது.



ஆக்கம் தேசப்பிரியன்

free hit counter